புதன், 22 ஜூலை, 2020

கோவை ஞானி காலமானார் - இரங்கற் செய்திக்குறிப்பு

இரங்கல் செய்திக் குறிப்பு

தமிழாய்வுலகின் மூத்த அறிஞரும் போராளியுமான கோவை ஞானி அய்யா இன்று காலை 11.15 மணியளவில் காலமானார். இச்செய்தியறிந்து நமது திணைக்களம் ஆழ்ந்த துயரடைகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே நோயினால் பீடிக்கப்பட்டிற்ற அவரின் பொன்னுடல் இன்று நம்மிடமில்லை. ஆனால் அவரின் ஆன்மா எழுத்துகளிலும் அவரின் நட்புகளிலும் உறைந்திருக்கிறது. நம் கண்முன்னே இயற்கையைப் பேணிய மனிதர், இயற்கையின் அங்கம் நாம் என்பதை உணர்ந்து செயல்பட்ட உயிர்நேயங்கொண்டவர். தமிழை நவீனப்படுத்த வேண்டும் என்று தொடர்ச்சியாக இயங்கியும் பேசியும் எழுதியும் வந்தவர். மார்க்சியத்தைப் பெரியாரியத்தோடும், நம் அறிவுமரபோடும் இணைத்தவர். சங்க இலக்கியம், தொல்காப்பியம், சித்தர் மரபு, சைவ மரபு ஆகியவற்றை இணைத்து தமிழ்ச்சிந்தனை மரபை நவீனமாக்கியவர். தமிழ் இடதுசாரி ஆய்வுகளின் போதாமைகள் குறித்துப் பேசியவர். மண்ணுக்கேற்ற மரபைப் பேணுவது குறித்து எழுதியவர். தமிழ்க்கல்வி குறித்தும் சிந்தித்து எழுதியிருக்கிறார்.

தமிழ்ச்சிந்தனை மரபின் கொடையான திணைக்கோட்பாட்டை விரிவாக்கம் செய்தவர். அவரின் மாணவர்களுக்கும் நண்பர்களுக்கும் இதன் முக்கியத்துவத்தை உணர்த்தி ஆய்வுகளைச் செய்ய உதவியவர். பல நூலகங்களுக்குத் தன் நூல்களைக் கொடையாக அளித்தவர். அவர் அடிப்படையில் பள்ளித் தமிழாசிரியர். இலக்கிய அமைப்புகளைக் கோவையில் நடத்தியவர். கவிஞர். நிகழ், தமிழ்நேயம் போன்ற சிற்றிதழ்களை நடத்தியவர். பன்முகங் கொண்ட ஆளுமை.

அவர் தமிழ்ச் சூழலுக்கு அளித்த கொடைகளில் சில, இந்திய தத்துவத்தில் பிரச்சனைகள் (புதுப்புனல் - 2015), மார்க்சியமும் தமிழ் இலக்கியமும் (1988), எண்பதுகளில் தமிழ் நாவல்கள் (1994), மார்க்சிய அழகியல் (2002), தமிழ் மெய்யியல் அன்றும் இன்றும் (2008), செவ்வியல் நோக்கில் சங்க இலக்கியம் (2010), ஏன் வேண்டும் தமிழ்த் தேசியம் (2012 - புதுப்புனல்), இன்று ஏன் தேவை சங்க இலக்கியம் (தொகுப்பாசிரியர்-2014).

தமிழாய்வில் ஏற்பட வேண்டிய நவீனம், புதியபுதிய முறையியல்கள் குறித்து அக்கறையுள்ளவர்.  

ஒருமுறை நமது குழுவிலுள்ள நண்பர்கள் சந்திக்கச் சென்றிருந்தபோது, நண்பர் ஜவகர் எங்களை அறிமுகம் செய்து வைத்தார். எங்களின் ஆய்வுகுறித்தும், ஆர்வம் குறித்தும் எடுத்துச் சொன்னபோது அவர்க்கு மட்டற்ற மகிழ்ச்சி முகத்தில் பொலிந்தது. நம்பிக்கையான, ஆர்வமுடைய இளந்தலைமுறையைக் கூடவே வைத்துள்ளீரென பெருமிதம் கொண்டார். எதிர்காலச் சூழல் குறித்தும் கவலைப்பட்டார். வயது பாராது நட்பு பாராட்டுபவர். அவர் எப்போதும் கையில் பகைமுரணைத் தொட்டதில்லை. நட்புமுரண் அவரின் வலிமை.

            நம்மிடமுள்ள ஊக்கமும் நம்பிக்கையெல்லாம் அவரின் எழுத்துகள்தான். அதனைக் கூடுமானவரை எடுத்துச் செல்வோம். வாசிப்போம். விவாதிப்போம்.

உடன்தானில்லை, அவர் நம்மோடே உள்ளார். நாம் அடைகின்ற சுயமரியாதை, பெறுகின்ற இனமானம், அறிவார்ந்த தமிழ்ச்சமூகம், உயிர்நேயம், யாவற்றிலிருந்தும் விடுதலை எங்கும் எங்குமாய் ஞானியே நிறைந்திருப்பார்.

 

வெற்றிடம்

வெற்றிடத்தில்

சில மலர்களை முளைக்கவிடு.

வெற்றிடமும் இப்பொழுது

நான் இல்லாமல்...

என் அருகில் நீ இல்லை

ஆனால்

என் நினைவாக நீ இருப்பாய்

உன் நினைவுகள்

எனக்குள் படுகின்றன.

 

நண்பனே நீ அழுகிறாய்

என்னையும் நினைக்கிறாய்

நன்றி.

எதற்காக நாம் அழுகிறோம்

கூடி நடந்தோம்

நடந்த தடங்களை நினைத்தா

நாம் நடந்து பதிந்த தடத்தில்

என் தடயம் விட்டுப் போனதற்கா

என்னை இழப்பதால்

உன் விழியில் எதையாவது

இழப்பதற்காகவா

எதற்காக அழுகிறாய்

அழ வைக்கிறாய்

சேர்ந்தே நடந்தோம்

சில தடயங்களை விட்டு

இனி முடியுமா

நான் இல்லாமல்

நீ நடக்க வேணும்

 

- கோவை ஞானி

(நன்றி : Pothi கவிதை முகநூல் பக்கத்திலிருந்து)

வெட்சி இதழுக்கான திணைக்களம்

நாள் : 22-07-2020

இடம் : திருவாரூர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வெட்சி இதழ் நிகழ்த்தும் "தமிழியல் ஆய்வின் திசைவழி" : பன்மைத்துவ வெளிகளை இணைக்கும் கருத்தரங்கம்

  வெட்சி இதழ் நிகழ்த்தும் "தமிழியல் ஆய்வின் திசைவழி" : பன்மைத்துவ வெளிகளை இணைக்கும் கருத்தரங்கம்   இன்றைய தமிழியல் ஆய்வுச் சூழல் ப...