புதன், 26 மே, 2021

முல்லை ஆதவன் நாட்குறிப்பு : 2020-11-21

 

வெட்சி இதழ் : மொழி வரையும் தடம்

=========================



முல்லை ஆதவன் நாட்குறிப்பு : 2020-11-21

===================================

வெட்சி  மலர் : இரண்டு – (இதழ்கள் மூன்று - நான்கு இணைந்து) பேராசிரியர் சுசுமு ஓனோ நூற்றாண்டு நினைவிதழாக வெளிவந்திருக்கிறது.

நண்பர் திரு.நி.கனகராசன் - கானகநாடன் அனுப்பி இருந்தார்.  மிகமகிழ்ச்சியுடன்  நன்றி கூறுகிறேன்.

ஒரு பருந்துப் பார்வையாகப் பார்த்து முடித்தவுடனே அவசரமாக என் மகிழ்ச்சியான வாழ்த்துக்களை மட்டும் உடனடியாகப் பதிவு செய்துவிடலாம் என்று  தோன்றியது.

அதைப்பற்றிய விரிவான கருத்துரைகள் எழுதுவதற்கான ஆசை இருக்கிறது பின்னால் விரிவாக எழுதலாம்.

-----------------------------------------------------------

இந்த இதழை வெளியீடு செய்துள்ள  இளைஞர்களுக்கு என்னுடைய மகிழ்ச்சியான வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழியல் ஆய்வு மற்றும் படைப்பிலக்கியத் தளங்களில் புதிய இளைஞர்கள் புதிய அலைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்த இதழில் நான்  காணும் இளைஞர்கள் பெரும்பாலோர் எனக்கு அறிமுகம் ஆகாத புதியவர்கள்- இவர்கள் எழுச்சியை - புதிய சாதனைகளை உருவாக்க வேண்டும் என்று செய்கிற முயற்சிகளைப் பார்த்து மனம் மகிழ்கிறேன்  - இவர்களின் ஆர்வம் மகிழ்வைத் தருகிறது – சில இடங்களில் மிகை ஆர்வமும் காண்கிறேன் – ஆனால் எந்த குருதேவரின் – கொடையாளியின் – கருத்தாளியின் ஆள்கையும் இல்லாமல்  - எந்தப் பெரிய ஆளுமையின் பின்புலமும் கைவிரல் தழுவலும் இல்லாமல் சுயமாக இவர்கள் தம் பறத்தலில் விரிந்திருக்கிறார்கள் - இதுவே இந்த இதழாளிகளின்  பலம் - இதுவே பலவீனமும் கூட – ஆனால் இவர்கள் சரியான திசை வெளிகளில் வலிமையாகப் பறந்துகொண்டிருக்க வேண்டும் என்பது எனது ஆசை.

==============================

மதிப்பீடாக அல்லாமல் – என் பார்வைக்குறிப்பாக – இந்த இளைஞர்களை வாழ்த்துவதற்காக – சில குறிப்புகளைப் பதிவு செய்யலாம் என்று தோன்றியது.

ஜப்பானிய பேராசிரியர் சுசுமோ ஒனோ பற்றி நம்முடைய - பரவல் இலக்கியக் கருத்தாடல் களங்களில் விரிவாக அறிமுகம் ஆகவில்லை என்றே நினைக்கிறேன் - வணிகச் சொற்பொழிவு – பெருவிழாக் கூட்டங்கள் – கையொலி வாயொலி நிறைக்கும் பெரும் வித்தக உரையாளர்களுக்கெல்லாம் சுசுமோ ஒனொ பற்றிப்  பேசுவதற்கு நேரமில்லை - பேசினாலும்  கடைவிரித்தால் கொள்வாரில்லை என்ற கதை இருப்பதால் வியாபாரிகள் கடை விரிக்க மாட்டார்கள் – அல்லவா ? பட்டங்கள் தருவதற்காக - பெறுவதற்கான  ஆராய்ச்சிக் களங்களில் அவரவர் பாடு இருக்கிறது - ஆனாலும் யாரோ சிலர் ஏதாவது செய்து கொண்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது அல்லவா ?

மொழி வரலாற்று ஆய்விலும் இலக்கண ஆய்வுக் களத்திலும் புலமை பெற்ற சுசுமோ, தமிழ் ஜப்பானிய மொழிகளின்  ஆய்வுக்கு ஆற்றிய பங்களிப்பை - எதிர்காலத்தில் தமிழ் ஒப்பிலக்கிய ஒப்பியல் மொழி ஆய்வாளர்கள் செல்ல வேண்டிய திசைகளை அடையாளம் காட்டிய சுசுமு ஓனொவை நினைவுகூறும் வகையில் இந்த இதழை வெளிக்கொண்டிருப்பதற்கு ஒரு பெரிய பாராட்டைக் கைகள் கொட்டித் தரவேண்டும்.

பண்டைய தமிழ் சப்பானிய ஒப்பாய்வு பற்றி பேராசிரியர் சண்முகதாஸ் மற்றும் மனோன்மணி சண்முகதாஸ் ஆகியோருடன்               திரு. நி கனகராஜ் மேற்கொண்டிருக்கும் நேர்காணல் மிக அருமையானது.  தமிழ்மக்கள் அறிந்துகொள்ள வேண்டிய பல புதிய செய்திகளைத் தருகிறது.

பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் ஜப்பானிய மன்யோசுப் பாடல்களில் ஆயிரம் பாடல்களைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் – அதுவும் ஆங்கிலம் வழியாக அல்லாமல் மூல யப்பானிய மொழியில் இருந்தே மொழிபெயர்த்திருக்கிறார் என்பது எவ்வளவு பெரிய செய்தி !

1987 ஆம் ஆண்டில் இருந்து கடந்த முப்பத்து மூன்று ஆண்டுகளாக மன்யோசு - தமிழ்ப் பாடல்களில் பேரா. மனோன்மணி ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்.

மன்யோசு  அகப்பாடல் மரபுகளை பற்றி செல்வ அம்பிகை நந்தகுமாரனும் – நி. கனகராசு ஆகியோரும் எழுதி இருக்கும் ஆய்வு கட்டுரைகள் மிகச் சிறப்பாக இருக்கின்றன.

தமிழ் ஆய்வுக் களத்தில் பிறமொழிக் கவிதைகளோடு ஒப்பாய்வுக் களத்தை இது வலிமைப் படுத்துகிறது. 

நான் விரும்பிப் படிக்கும் எழுத்தாளர் சு வேணுகோபாலன் – தமிழ்க் கதையுலகில் தனக்கேயான ஒரு தனிவழியில் சாதனைகள் செய்துகொண்டு ஓசையில்லாமல் படர்ந்துகொண்டிருப்பவர் – அவருடைய விலகிச் செல்லும் பாதை என்னும் சிறுகதையை மிக விரும்பிப் படித்தேன் – படித்து முடித்த பிறகு நூறாண்டு காலம் வாழ்க என்று கந்தசாமியுடன் சேர்ந்துகொண்டு உரக்கப் பாடிக்கொண்டு வெகுநேரம் இருந்தேன் – சிறுகதை நன்றாக இருந்தது என்றெல்லாம் ஒற்றைவரியில் சொல்ல முடியாத ஒரு வேறு அனுபவம் அது .

சங்க இலக்கியத்தில் மொழி பெயர்ப்புச்சாதனைகளைச் செய்திருக்கும் பேராசிரியர் தட்சிணாமூர்த்தி தமக்குரிய மொழிபெயர்ப்பு அனுபவங்களோடு சங்க இலக்கிய மொழி பெயர்ப்புகளைப் பற்றிய மதிப்பீடுகளைத் தந்திருக்கிறார்.

தமிழ் மலையாள செவ்வியல் கூறுகள் பற்றி கே. நாச்சிமுத்து கட்டுரை ஆழ்ந்து பயணம் வேண்டிய கட்டுரையாக உணர்கிறேன்.

உத்திரமேரூர் கல்வெட்டுகள் பற்றி கே. ஆர். சங்கரன் ஆய்வுரை,  பிரியாபாபு எழுதிய சினிமாவில் திருநங்கைகள் பற்றிய கட்டுரை ,  உயிரொலி விட்டைசைகளும்  தீர்வுகளும் பற்றி தி.மோகன்ராஜு கட்டுரை, தமிழ்-வடமொழி- பாலிமொழி மூன்றாம் வேற்றுமை உருபு பற்றி இராமச்சந்திரன் கட்டுரை, பாரதிதாசன் - பிராஸ்ட் பற்றி                                      இராம. குருநாதன் கட்டுரை என்று பல்வகை வேறுபட்ட தளங்களில்  அடர்த்தியான கட்டுரைகளைப் பார்க்கிறபோது உண்மையில் பெரு வியப்படைகிறேன் –

நினைத்த அடுத்த நொடியே நூறு நூறு உள்ளீடற்ற வெற்று நகல் எழுத்தளிப்பை ஆய்வுக்கட்டுரைகள் என்ற பெயரில்  தயாரித்து நூல்களாக ( கையில் பண்ம் இருந்தால் ) வெளியிட்டு மாலைகள் சூடியபடி பலர் உலா வந்து கொண்டிருக்கும் சூழலில் – அழுத்தமான அசைவுகளைச் செய்துகொண்டிருக்கும் சிலரைப் பார்க்கும்போது மிக மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

தீண்டாமை உழைப்பாளிகள் நூலைப்பற்றி மிகச்சிறந்த அறிஞரான அறவேந்தன் அறிவியல் நோக்கில்  மதிப்பீடு வழங்கியிருக்கிறார்.

மாலதி மைத்ரி கடல் ஒரு நீலச்சொல்  என்னும் நூலைப் புத்தலைக் கவிஞரான வினோதா அவருக்கே உரிய மொழி ஆளுமையோடு அருமையான ஓர் அறிமுகத்தை வழங்குகிறார். மாலதி மைத்ரி கவிதைக்குள்  உள்ளே ஆழந்து சென்று, இருக்கும் ஆன்மாவை வெளிக்கொண்டு வரும் பயணத்தில் மாலதியைத் தொடர்ந்திருக்கிறார்- வினோதா புதிய திசைகளில் வேறு யாரும் பயணம் செய்யாத மொழியாடல் வெளிகளில் தம் தேடலை நிகழ்த்திக் கொண்டிருப்பவர் -  அவருக்கு ஏற்ற ஒரு பயண வெளியாக மாலதி மைத்ரி அமைந்திக்கிறார். நூல்களைப் பற்றிய மதிப்பீடு -அறிமுகம் என்பதாக ஆறு  கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கட்டுரைகளும்  அவரவர் தளங்களில் செழுமை பெற்றுள்ள தரமான ஆய்வாளர்களால் எழுதப்பட்டிருக்கின்றன.

இந்த இதழில் நவீன கவிதைகளுக்கும் சிறப்பிடம் அளிக்கப்பட்டிருக்கின்றன.  மாயா ஆஞ்சலு வின் ஒரு கவிதை தமிழாக்கம் செய்யப்பட்டு இருக்கிறது.

கவிதைகள் ஒவ்வொன்றும் புதுவகையான மொழியாடலுடன்  கருத்தாடலுடன்  தனித்தன்மை பெற்றதாக அமைந்திருக்கின்றன.

எதிர்காலத்தில் தமிழ்க் கவிதை உலகில் புதிய அலைகளை உறுதிப்படுத்தக் கூடிய வீச்சு அலைகளாக நான் அடிக்கடி பார்த்துக் கொண்டிருக்கும் பூபாலன், அம்சப்பிரியா, சங்கமித்ரா, கானகநாடன், மணிமொழி  கவிதைகளை இந்த இதழிலும் நான் பார்க்கிறேன்.   வினோதா கவிதை காணவில்லையே என்று நினைக்க நினைக்க அவருடைய நூல் மதிப்புரையே கவிதைதானே என்றும் மறு மொழியும் கூடவே வந்தது. 

கண்ணன் என் ஆய்வு என்று கனல்வனன் எழுதிய கவிதை போன்ற ஒரு எழுத்துரை மிகுந்த சூடாக வெப்பம் மிகுந்த சொற்களோடு வெளி வந்திருக்கிறது -  உண்மை எப்போதும் சுடும் – இங்கே சற்று அதிகமாகச் சுடுகிறது – சூடு தெரியாமலே கொதிக்கக்கொதிக்கச் சூடு வைக்கும் எழுத்துக் கலையைக் கைவரப்பெற்றிருக்கிறார் கனல் வனன்.

இராகுலனின் கவிதை பற்றி காளிமுத்து எழுதிய சிற்றுரை  சுருக்கமாக இருந்தாலும் அழுத்தமாகப் பதிகிறது.

என் மீளல் பார்வை மகிழ்விற்காக  நான்கு கவிதைகளைக் குறித்து வைத்திருக்கிறேன்.

=============================

ஊர்கூடித் தேர் இழுத்தல் என்பது போல – ஆசிரியர்குழு பதிப்பாளர்குழு என்று பன்னிரு இளைஞர்கள் புதிய கனவுகளோடு - சிறகுகளை விரித்திருக்கிறார்கள் - ஆய்வுகளம் படைப்புக் களம் இரண்டிலும் தம் அழுத்தமான முத்திரைகளைப் பதிக்கிறார்கள்.

அவர்கள் பறத்தல் மிகச் சிறப்பாகத் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

 


 

கவிஞர் றாம் சந்தோஷ், குப்பம்

வெட்சி இதழ் கிடைத்தது. தமிழ் கல்விப் புல மாணவர்கள் கொண்டுவரும் இதழ். என்னை ஆச்சரியப்பட வைத்தது இதழ். ஆராய்ச்சி, படைப்பு மட்டுமில்லாது, திருநங்கையர் – மாற்றுப் பாலின எழுத்துக்கு முக்கியத்துவம் அளித்துள்ளமை. நிஜமாகவே தமிழ்த்துறை மாணவர்கள் கொண்டுவரும் இதழ்தானா?? கிள்ளிப்பார்த்துக் கொண்டேன். மகிழ்ச்சி அளித்தது. இவ்விதழில் இரண்டு திருநங்கையர் தொடர்பான பனுவல்கள் வெளிவந்துள்ளன, திருநங்கை பிரியாபாபு எழுதியவை. அதில் என்னை மேற்கொண்டு ஆச்சரியப்படுத்திய தகவல் இது (இதில் திருநங்கையர் குறித்துத் தமிழ்ப்புல ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதை சேர்த்துக் கொள்ளவும்)

மாணவர் படைப்புகள் இன்னும் தீவிரமும், செழுமையும்பட வேண்டும். அன்பான வாழ்த்துகள் மாணவ நண்பர்களுக்கு…

வெட்சி இதழ் நிகழ்த்தும் "தமிழியல் ஆய்வின் திசைவழி" : பன்மைத்துவ வெளிகளை இணைக்கும் கருத்தரங்கம்

  வெட்சி இதழ் நிகழ்த்தும் "தமிழியல் ஆய்வின் திசைவழி" : பன்மைத்துவ வெளிகளை இணைக்கும் கருத்தரங்கம்   இன்றைய தமிழியல் ஆய்வுச் சூழல் ப...